சென்னை: தனி ஈழம் கோரி பொறியியல் கல்லூரி மாணவர்களும் தீவிரமாக போராட்ட களத்தில் இறங்கியதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.
அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்த பின்னர் மாணவர்கள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர். 300க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
திண்டுக்கல்லில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரி வாயில் முன்பு சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.. இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். மாணவர்களின் போராட்ட களத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.. பின்னர் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
டெல்லியிலும் ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி பொங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.