அமெரிக்காவில் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லும்போது விபத்து: பெற்றோர் இறந்த பிறகு பிறந்த குழந்தை

நியூயார்க்: ப்ருக்லினில் பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தம்பதி இறந்தனர். ஆனால் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. தாய் இறந்த பிறகும் அது உயிர் பிழைத்துக் கொண்டது. 

அமெரிக்காவின் ப்ருக்லினில் உள்ள வில்லியம்ஸ்பர்கைச் சேர்ந்தவர் நாதன் க்ளுபர்(21). அவரது மனைவி ரைஸி க்ளூபர்(21). இருவரும் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரைஸிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து நாதன் ஒரு டாக்ஸியில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிஎம்டபுள்யூ செடான் கார் டாக்சியின் மீது மோதியது. இதையடுத்து அந்த காரில் இருந்த ஆணும், பெண்ணும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். இந்த விபத்தில் நாதன் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும் ரைஸியின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது தான் அந்த தம்பதியின் முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டாக்சி டிரைவர் காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: