மலேசிய ஏர்லைன்ஸ் ஏ380 ரக விமானங்களின் முதல் வகுப்பில் பயணம் செய்ய 12 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதியில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து, விமான டிக்கெட் பதிவு செய்யும் முகவர்களுக்கு சுற்றறிக்கையில் மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. முதல் வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குழந்தைகளின் அழுகை போன்றவை சிரமத்தைத் தருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் எனினும் 350 இருக்கைகள் கொண்ட அதற்கு அடுத்த வகுப்புகளில் பயணம் செய்வதற்கு அனுமதியுள்ளது. அதில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
கோலாலம்பூரிலிருந்து லண்டன் செல்லும் ஏ380 ரக விமான சேவை வரும் ஜுலையிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது, குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
குழந்தைகள் அழுவது உள்ளிட்ட நிறைய புகார்கள் வந்ததையடுத்து 747-400 ரக விமானங்களில் குழந்தைகள் பயணம் செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.