சென்னையில் ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள் தயாரிப்பு: ஜெயலலிதா

Cars Chennai சென்னை: சென்னையில் ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மோட்டார் வாகன உற்பத்தியிலும் அது சார்ந்த தொழிலிலும் சென்னை நகரை உலகின் முதன்மை நகரமாக மாற்றுவதே எனது லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஜெர்மன் நாட்டின் டெய்ம்லர்-பென்ஸ் நிறுவனம் கார்கள் மற்றும் கனரக 
வாகனங்களை தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரூ.4,400 கோடி செலவில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் வர்த்தக வாகனங்கள் தயார் செய்யும் தொழிற்சாலையை 400 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளது.

இந்த தொழிற்சாலை, பாரத் பென்ஸ் டிரக்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை தயாரிக்க உள்ளது.

இந்த புதிய தொழிற்சாலை திறப்பு விழா தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்தார். குத்துவிளக்கு ஏற்றி தொழிற்சாலையை திறந்து வைத்து அவர் பேசுகையில்,

டெய்ம்லர் தனது தொழிற்சாலையை அமைக்க சென்னையை தேர்ந்தெடுத்ததற்கு எனது பாராட்டுக்கள். உலகில் டெய்ம்லர் டிரக் உற்பத்தி தொழிற்சாலைகள் 27 உள்ளன. அவற்றில் ஜெர்மனியில் உள்ள நிறுவனங்களை தவிர்த்து ஒரகடத்தில் அமைக்கப்பட்டிருப்பது தான் அதன் 3வது பெரிய தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் என்னுடைய அரசு தொழிற்சாலைக்கு தேவையான ஆதரவை தர உள்ளதால் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய இருந்ததை ரூ.4,400 கோடியாக உயர்த்த உள்ளனர்.

உலக அளவில் உள்ள சிறந்த 500 நிறுவனங்களில் இந்த நிறுவனம் 24வது இடத்தில் உள்ளது. 
உலகில் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன சந்தையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மோட்டார் வாகன தொழில்துறையில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரேஸில் ஆகிய 5 நாடுகளுக்கு பிறகு இந்தியா 6வது உள்ளது.

தொழில் உற்பத்தி அதிகரிப்பு, நடுத்தர மக்களின் வாங்குதிறன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 2020ம் ஆண்டில் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனையில் இந்தியா முதல் 5 இடங்களில் இடம் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சென்னை நகரம் ஆசியாவின் மோட்டார் வாகன உற்பத்தி கேந்திரமாக உருவாகி வருகிறது. கடந்த 1991-96ம் ஆண்டு காலத்தில் எனது தலைமையிலான ஆட்சியின்போது ஆட்டோமொபைல் துறைக்கு உத்வேகம் அளித்து வாகன உற்பத்தியில் புரட்சி ஏற்பட்டது. அதன் விளைவாக ஹூண்டாய், போர்ட் கார் தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.

மீண்டும் 2001-06ம் ஆண்டு எனது ஆட்சிக்காலத்தில் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம் வந்தது. இதுபோன்று பன்னாட்டு கார் தொழிற்சாலைகள் அடுத்தடுத்து வந்ததால் ஆட்டோமொபைல் தொழில் தொடங்க விரும்பப்படும் நகரமாக சென்னை உருவானது.

இன்று இந்தியாவிலேயே சென்னை நகரம் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் கேந்திரமாக திகழ்கிறது. உலக அளவில் முதல் 10 ஆட்டோமொபைல் நகரகளின் பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.

சென்னை நகரம் இன்றைய நிலையில் ஆண்டுக்கு 13 லட்சம் கார்களும், 3 லட்சம் வர்த்தக வாகனங்களையும் உற்பத்தி செய்யக்கூடிய திறனை பெற்றுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 3 கார்களும், 75 வினாடிகளில் ஒரு வர்த்தக வாகனமும் இங்கு தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த வாகனங்களில் 35 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன. கடந்த 2011ம் ஆண்டு எனது ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்ய வந்த வணணம் இருப்பதால் நிறைய நிறுவனங்களுடன் எனது அரசு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் நல்ல துறைமுக வசதியும் உள்கட்டமைப்பு வசதியும் தொழில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையும், மாநில அரசின் ஆதரவும் உள்ளது. 
மோட்டார் வாகன உற்பத்தியிலும் அது சார்ந்த தொழிலும் சென்னை நகரை உலகின் முதன்மை நகரமாக மாற்றுவதே எனது லட்சியம்.

விரைவில் எனது அரசு மோட்டார் வாகனங்கள், உயிரிதொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், சூரிய மின்சக்திக்கும் முக்கியத்துவம் வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுக்கு புதிய கொள்கைகளை அறிவிக்கும்.

2023ம் ஆண்டிற்குள் 2,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழி மற்றும் 8 வழி விரைவுச்சாலை அமைக்கவும், நெடுஞ்சாலையில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிப்பாதையும் அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழ்நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதும் எனது லட்சியம் ஆகும் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: