துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் இளையான்குடி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் எழுதிய ’வஹியாய் வந்த வசந்தம்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி மாலை கராமா அல் இப்ராஹிமி உணவகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இனிய திசைகள் வாசகர் வட்ட புரவலர் ஷர்புதீன் தலைமை தாங்கினார்.
சென்னை சீதக்காதி அறக்கட்டளை விருது பெற்ற கவிஞர் பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலாய்வுரை வழங்கினார். அவர் தனது உரையில் எளிமைக் கவிஞர் ஹிதாயத்துல்லாஹ்வின் எளிமையான கவிதை நடையில் வஹியாய் வந்த வசந்தம் உருப்பெற்றுள்ளது. இத்தகைய கவிதை நூலை அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நூலை புரவலர் ஷர்புதீன் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் எமிரேட்ஸ் அப்துல் லத்தீஃப், கம்பம் சையது அபுதாஹிர், முஹம்மது முஸ்லிம், புதுக்கோட்டை ரியாஸ், சித்தையன்கோட்டை முஹம்மது, மணமேல்குடி அம்ஜத்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முதுவை ஹிதாயத் தொகுத்து வழங்கினார்.