போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்


புதுடில்லி: உங்கள் செல்ல குழந்தைகளுக்கு பருவம் தவறாமல் வழங்கி வந்த போலியோ சொட்டு இனி வழங்க வேண்டியது இருக்காது. காரணம் இந்தியாவில் 17 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. போலியோ இல்லாத நாடாக உலக சுகாதர நிறுவனமும் இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நடப்பதுதான் கடைசி கட்ட போலியோ ஒழிப்பு சொட்டு முகாம்.
      போலியோவில் பலர் கால் இழந்து தவழ்ந்த காலம் இனி இருக்காது. மக்களை அச்சுறுத்தி வந்த போலியோ முடிவுக்கு வந்திருப்பது நாட்டுக்கே மகிழ்ச்சியான விஷயம் ஆகும். இந்த கொடூர நோய் தாக்கத்தை ஒழிக்க பல ஆயிரம் கோடிகளை செலவழித்து, பலக்கட்ட முகாம்கள் நடத்தி மத்திய மாநில அரசுகள் பெரும் சிரத்தையுடன் இந்த பணியை முடித்திருக்கிறது என்றால் மிகவும் பாராட்டத்தக்கதே ! இந்த முகாம்களை சிறப்பாக நடத்திய சுகாதார துறை இலாகாவினர், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தேச அக்கறையுடன் தினமலர் ஒரு ‘ சல்யூட் ’ அடிக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் இந்த சேவையில் பங்காற்றிய 25 லட்சம் பேருக்கு பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.

மத்திய சுகாதார அமைச்சர் பேட்டி : இது குறித்து என மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெருமித்ததுடன் கூறியதாவது: போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்ட, பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வின் எதிரொலியாக, இந்தியாவில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளது . மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலமே இந்த வெற்றி பெற முடிந்தது இவ்வாறு அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்தியாவில் கடந்த 2009 ல் 741 பேருக்கு இந்த பாதிப்பு இருந்தது . 2011 ஜனவரி மாதம் மேற்குவங்கத்தில் ஒரே ஒரு நபர் போலியோ பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டார். ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: