நாகர்கோவில்: இலவச கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.18 நாட்கள் நடைபெறுகின்ற இந்த கணக்கெடுப்பில் அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கட்டாயம் என்பதை இலவச கட்டாய கல்வி உரி்மை சட்டம் உறுதி செய்கிறது. 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி கற்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படுகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுகள் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் கண்டறியப்படும் குழந்தைகள் பி்ன்னர் பள்ளி இணைப்பு மையங்கள், சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளனர்.
வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் இந்த கணக்கெடுப்பு பணிகள் 27ம் தேதி வரை நடக்கிறது. 18 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட தி்ட்ட ஓருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்கின்றனர்.