இந்தோனேசியாவில் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஏக் மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த மாகாண தலைநகர் பாண்டா ஏக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். பலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தனது குடும்பத்தினருடன் வெளியேறினர்.
இதற்கிடையே 7.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏக் மாகாண பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீட்டர் ஆழத்தில் இதில் உருவானதாக தெரிவித்தது, இதனால் வழக்கத்துக்கு மாறாக அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அதை தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்த போதிலும் எந்த வித பேரிடரும் எற்படவில்லை.
நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததாகவும், அதனால் உயிர் சேதம், பொருட்சேதம் மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை என கூறப்படுகிறது.