சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்களை
பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய் குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ராதிகா, கூடுதல் துணை ஆணையாளர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ ஆகியோர் சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலின்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினார்கள். மறுமுனையில் பேசிய நபர் தன்னிடம் துணை நடிகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு ரூ. 10 ஆயிரத்துடன் வந்தால் அழைத்து செல்வதாக கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் போல் சென்ற பாலியல் தடுப்பு பிரிவு போலீசாரை தி.நகரில் தேவ் ஆனந்த் பிலிம்ஸ் என்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அவர்களை பின் தொடர்ந்து சென்ற ஆய்வாளர் அந்த நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக புகுந்து அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்த செல்வநாயகன் (54) மற்றும் அவரின் உதவியாளர் ஞானபிரகாசம் (64) ஆகியோரை கைது செய்தனர்.
அங்கிருந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் செல்வ நாயகன் தேவ்ஆனந்த் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சினிமா படம் தயாரிப்பதாகவும், சில படங்களுக்கு துணை இயக்குனராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது பேசாதே என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்குவதாகவும் கூறினார். இதே போல் சினிமாவில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு அபார்ட்மெண்டில் 3 இளம்பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வந்த நாகேந்திரன் (50) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சினிமா மேக்கப்மேன் கண்ணதாசன் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சென்னையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சைதாப் பேட்டை 4-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
nakkheeran