புதுடில்லி: மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் அவருக்கென நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் ராஜூராமச்சந்திரன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார். நீதிபதி அப்தாப் ஆலம் முன்பு நடந்த விசாரணையின்போது அவரது வக்கீல் வாதிடுகையில்: அஜ்மல் கசாப் மீது தேத்திற்கு எதிரான சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த குற்றத்தில் கசாப்புக்கு பங்கு எதுவும் இல்லை. கசாப் கொலைக்குற்றவாளியாக கருதினாலும் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபட்டார் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் எதிர்த்து வாதிட முழு உரிமை உண்டு என்றும் கூறினார்.
கசாப்பை பொறுத்தவரை மும்பை ஐகோர்ட் அவருக்கு மரணதண்டனையை கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21 ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 5 முறை தூக்கிலிடும்படி கடும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2008 நவம்பர் மாதம்மும்பை தாக்குதலில் 26 ல் நடந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.