வாயைப் பொத்தி, கண்ணை மூடிக் கொண்டோமே என்று மக்கள் வருந்துகிறார்கள்- கருணாநிதி

Karunanidhi சென்னை: சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுக்கு வாக்களிக்காமல் வாயைப் பொத்திக் கொண்டு, கண்ணையும் மூடிக் கொண்டு விட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாமக, தேமுதிகவிலிருந்து வெளியேறிய ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் என கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் நேற்று கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கலைஞர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் வரவேற்பு அளித்து கருணாநிதி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

பாமக கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் தோழமையாக இருந்த கட்சி. இடையில் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சில பூசல், வேறுபாடுகள், கருத்து ஒவ்வாததாகி விட்ட சூழலில் இந்த காட்சியை காண்கிறோம்.

எங்களுக்கு ஏற்ற இடம் இது தான் என்று வந்திருக்கிறீர்கள். ஏற்ற இடமாக அல்ல. ஏற்றுக் கொண்ட இடமாக வந்திருக்கிறீர்கள்.

திராவிட இயக்கம் ஏன் பெரியாரால் உருவாக்கப்பட்டது. அண்ணாவால் ஏன் வளர்க்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நம் சமுதாயம். இந்த சமுதாயத்திற்கு திமுக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு உருவாக்கி அவர்களை ஒரு தொகுப்பாக்கி அதில் பெரும்பான்மையோர் வன்னியர்.

பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு திமுக என்றென்றும் பாடுபட்டு வருகிறது. திமுக என்பது தேர்தலுக்கான அரசியல் இயக்கம் அல்ல. சமூக புரட்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கம்.

திராவிட இயக்கம் என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் பிற்படுத்தப்பட்ட, மிக மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை கைதூக்கிவிட எந்த இயக்கமும் இல்லாமல் போயிருக்கும். நாம் இந்த இயக்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கருதுகிறார்கள் என்றால், அந்த எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் இந்தக் கூட்டம்.

மக்கள் தங்களை அறியாமல் திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை தராமல் போனதன் பயனை இன்று அனுபவிக்கிறார்கள். திமுக ஆட்சி இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் வாயை பொத்திக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு தவறு செய்து விட்டோமே என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம்.

பரிதிமாற்கலைஞரால் பெற முடியாத வெற்றியை 100 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வாழ்ந்த மதுரை வீட்டில் சிலை நிறுவி அவர் கனவை நனவாக்கினோம். இப்போது செம்மொழி என்றால் செந்தீ பட்டது போல சினம் கொள்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

செம்மொழி பூங்காவில் பூங்காவை அகற்ற முடியவில்லை. செம்மொழியை அகற்றி விட்டார்கள். அதனால் செம்மொழி ஒழிந்து விடுமா? திமுக ஆட்சி எதை செய்தாலும் அதை மாற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி ஒரு ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்க எனக்கு வலிமை வேண்டும்.

அந்த வல்லமை தர உங்களை பயன்படுத்திக் கொள்ள வந்திருக்கிறீர்கள். நான் விரும்பும் வலிமை வந்து இருக்கிறது. வெற்றியா தோல்வியா என்ற போரில் இதோ வந்து விட்டோம் வெற்றி தேடித் தர என்று நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம், தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதே என்று கேட்டதற்கு அதை வரவேற்பதாக தெரிவித்தார்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவித்து விட்டது. திமுக வேட்பாளர் யார் என்று கேட்டபோது, தேர்தல் ஆணைம் தேர்தல் தேதியை அறிவித்தப் பிறகுதான், வேட்பாளர் யார் என்பதை ஆராய்ந்து வெளியிடுவோம் என்றார் கருணாநிதி.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: