தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப் பட்டது. இதன்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை, 5.04 கோடியாக உயர்ந்தது. புதிதாக, 33.26 லட்சம் பேர், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
தமிழகத்தில், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம், கடந்த ஆண்டு அக்., 24ம் தேதி துவங்கியது. அன்று முதல், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாறுதல் செய்ய விண்ணப்பங்கள் நவ., 11ம் தேதி வரை பெறப்பட்டன.
அக்., 24ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 4 கோடியே, 73 லட்சத்து, 58 ஆயிரமாக இருந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து, நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் மாநகராட்சி கமிஷனரும், அந்தந்த. மாவட்டங்களில் கலெக்டரும் வெளியிட்டனர். அரசியல் கட்சிகளுக்கு, வாக்காளர் பட்டியல் அடங்கிய, "சிடி' வழங்கப்பட்டது.

வாக்காளர் இறுதிப் பட்டியலில், ஆண் வாக்காளர்கள், 2 கோடியே, 53 லட்சத்து 35 ஆயிரம்; பெண் வாக்காளர்கள், 2 கோடியே, 50 லட்சத்து, 93 ஆயிரம்; திருநங்கையர், 2,175 பேர் உள்ளனர். இந்த திருத்தப் பணியின் போது மட்டும் புதிதாக, 612 திருநங்கையர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், 21 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய வாக்காளர் தினமான 25ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள இடங்கள், பள்ளிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடக்கஉள்ளன.
ஜன., 25ல்... : திருத்தப் பணி குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இறுதி பட்டியலின் படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை முதல் முறையாக, 5 கோடியே, 4 லட்சத்து, 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பட்டியலில், 1,000 ஆண்களுக்கு, 990 பெண்கள் என்ற விகிதத்தில் இடம் பெற்றுள்ளனர்.
புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜன., 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடங்களில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகங்களிலும் அறியலாம்; இது தவிர, வலைதளத்திலும் காணலாம். தற்போது நடந்து வரும் ஐந்து மாநில சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பின்,சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
புதிதாக 33.26 லட்சம் பேர் சேர்ப்பு : வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, 38.98 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 33.26 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்காளர்களது இடமாற்றம், இறப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒரு முறைக்கு மேல் இடம் பெற்றிருப்பது போன்றவற்றால், 2.53 லட்சம் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதன்படி, இந்த திருத்தப் பணியில் மொத்தம் 30.72 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
dinamalar
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: