இஸ்லாமாபாத்: இந்த மாத இறுதியில் நாடு திரும்ப முடிவு செய்துள்ள, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாக்., அரசு மற்றும் ராணுவம், தன்னை கைது செய்வதைத் தடுப்பதற்காக, சவுதி அரேபிய மன்னரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.பாகிஸ்தானில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடப் போவதாக அறிவித்த முஷாரப், இந்தாண்டு மார்ச்சில் வருவதாக முதலில் தெரிவித்தார். பின், பிப்ரவரியில் வரப் போவதாக அறிவித்தார். சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அவர், இம்மாத இறுதியிலேயே, பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், அவர் நாடு திரும்பிய பின் அவர் மீதான வழக்கின் அடிப்படையில், அவரை அரசு மற்றும் ராணுவம் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.இந்த கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, இம்மாதம் 22ம் தேதி, சவுதி மன்னர் அப்துல்லாவை, முஷாரப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் உள்நாட்டு அரசியலில், சவுதி அரேபியா நடுவர் பணியாற்றி வருவதால், அந்நாட்டின் மன்னர் மூலம், தன் மீதான வழக்கின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் இருக்காது என்ற உறுதியை, அதிபர் சர்தாரி மற்றும் ராணுவத் தளபதி கயானி ஆகியோரிடமிருந்து பெறுவதற்காக இந்த சந்திப்பை, அவர் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானி தொழிலதிபர் ரஜா புகாரி, முஷாரப்பின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர். அவர், இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளை விரைவில் சந்தித்துப் பேச உள்ளார். முஷாரப் தனது கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டதாக, உத்தரவாதம் பெற்ற பின் தான் நாடு திரும்பும் தேதியை அறிவிக்க உள்ளார்.
dinamalar