மதுரை : மதுரை நகரில் கடந்தாண்டு 300 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது குடும்பத்தினரின் இன்றைய நிலை குறித்து போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, கடன் தொல்லை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களால், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்தாண்டு மட்டும் மதுரை நகரில் 300 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெண்கள் அதிகம். "வயிற்றுவலியால் இறந்ததாக' வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ""செல்லூர் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளில் வாரம் இருவர் தற்கொலை செய்கின்றனர்,'' என போலீசார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை செய்வதை தடுக்க, போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவர்களால், அவர்களது குடும்பம் இன்று எவ்வாறு பாதித்துள்ளது என்பதை சர்வே செய்து, அதை பொதுமக்களிடமும், வரதட்சணை புகார் கொடுக்கும் பெண்களிடமும் விளக்க, மதிச்சியம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் முயற்சி எடுத்துள்ளனர்.
இதேபோல், குற்றங்களில் ஈடுபட்டு கைதான மாணவர்களின், இன்றைய நிலை குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். குற்றங்களால் மாணவர்களின் குடும்பம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
dinamalar