என்னதான் சில செய்திகளை விட்டு விட்டு நல்ல செய்திகளை மட்டும் படிக்கலாம் என்று எண்ணினாலும், சில சமயம் இந்த மாதிரிச் செய்திகள் கண்களில் படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் கீழே குறிப்பிட்டுள்ள செய்திகள் சென்ற வியாழன் முதல் ஞாயிறு வரை செய்தித் தாள்களில் வந்த செய்திகள். மேலும் இப்போதெல்லாம் நல்ல செய்தி என்று எங்கே கண்ணில் படுகிறது?
முதல் செய்தி. ஒன்பதாம் வகுப்பு மாணவன் டீச்சரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த செய்தி. தன் பெற்றோரிடம் இந்த டீச்சர் மாணவனின் நடத்தைக் குறித்துப் புகார் செய்து அதனால் அவன் பாக்கெட் மணி, மொபைல் மற்றும் பைக் பறிக்கப் பட, ஆத்திரமடைந்த மாணவன் அந்த டீச்சரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தான்.
இரண்டாம் செய்தி. குடித்து விட்டு தண்டமாக வீட்டில் அமர்ந்து, மகனை வேலைக்கனுப்பி, அந்தப் பணத்திலும் குடித்து, சண்டை போட்டு, என்றிருந்த தந்தையைக் கத்தியால் குத்தி பதினாறு வயது மகன் கொலை செய்தான்.
மூன்றாம் செய்தி. பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் என்று படித்துக் கொண்டிருந்த ஐந்து ஆண் நண்பர்கள். அவர்களுடன் ஒரு பெண் சிநேகிதி. ஐந்து ஆண் நண்பர்களும் பெண் சிநேகிதியின் வீட்டுக்கெல்லாம் வந்து அவள் அம்மாவுடன் பேசி, தங்கச்சி தங்கச்சி என்று பழகுவார்களாம். அந்த அம்மாவும் இவர்களுக்கு சாதம் தன் கையாலேயே உணவு ஊட்டி விடுவது எல்லாம் வழக்கம். ஒரு நாள் இரவு அந்தக் கோஷ்டியில் ஒருவன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பதாகச் சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய் ஐந்து பேரும் இரவு முழுக்க போதையில் சீரழித்து காலை அரை மயக்க நிலையில் அரைகுறை ட்ரீட்மென்ட் கொடுத்து வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போய், பின்னர் அரை மயக்கத்தில் பெண் உளறியதைக் கேட்டு அம்மா குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பின்னர் எழும்பூரிலும் சேர்த்து ....
அப்புறம் ஐந்து பேரில் நால்வர் கைதாக, ஒருவன் தற்கொலைக்கு முயன்று பின்னர் இந்நேரம் கைதாகியிருக்கலாம். "பெற்ற மகன் மாதிரி நினைச்சு வீட்டுக்குள்ள சேர்த்து ஊட்டிஎல்லாம் விட்டேனேடா... மறக்கவே முடியாதபடி துரோகம் பண்ணிட்டீங்களே.." என்று அந்தத் தாய்க் கதறுகிறாராம்.
நான்காம் செய்தி. திருச்சி அருகே கன்னா பின்னா என்று ஓட்டி, முந்திய ஒரு காய்கறி லாரி டிரைவருடன், முந்தப் பட்ட பஸ் டிரைவர் வாக்குவாதம். சண்டையில் வாக்குவாதம் முற்ற, லாரி டிரைவர் 'மேலே ஏற்றிக் கொன்னுடுவேன்' என்று எகிற, 'எங்கே, கொல்லு பார்க்கலாம்..' என்று பஸ் டிரைவர் கோபத்தில் பதிலுக்கு எகிற, அத்தனை பயணிகள் முன்னிலையில் லாரி டிரைவர் லாரியைக் கிளப்பி பஸ் டிரைவரை லாரி ஏற்றி தக்காளி நசுக்குவது போல நசுக்கிக் கொன்றே விட்டார்.
ஐந்தாம் செய்தி. கணவனைக் கொன்ற பெண்ணை விடுதலை செய்தது கோர்ட். பெற்ற மகளிடம் தவறாக நடந்து பாலியல் பலாத்காரம் செய்த கணவனைக் கொன்ற மனைவியை கோர்ட் விடுவித்தது.
பஸ்ஸில் தவற விட்ட லட்சக் கணக்கான ரூபாய்ப் பணத்தைத் திரும்ப ஒப்படைத்த டிரைவர் கண்டக்டர் செய்தி, அதே போலப் பணத்தையும் நகையையும் திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பற்றிய செய்திகளும் உண்டுதான். ஆனால் குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்துப் படித்த இந்தச் செய்திகள் மனத்தைக் கலக்கின. காரணம் ஆயிரம் இருக்கலாம், டிவி, திரைப் படங்கள் (சிறுவன் 'அக்னீபத்' ஹிந்திப் படம் பார்த்துதான் எப்படிக் கொல்வது என்ற ஐடியா கிடைத்ததாம்) வீட்டுச் சூழ்நிலை, நண்பர்கள் சேர்க்கை....
என்ன சொல்ல.....? என்னவோ போங்க....


