கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு


நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.
மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.
செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.
முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: