மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டின் ஆலோசனைகள் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச

Rajapakse கொழும்பு: இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு வெளிநாட்டின் ஆலோசனையும் தங்களுக்குத் தேவையில்லை என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு படையினரை ஈடுபடுத்தவோ இல்லை. எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை.

இதனால் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ எங்களுக்கு அவசியமில்லை.

சொந்த புத்தியால்தான் ஜெயிச்சோம்

எமது படையினரால் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ வியூகங்களின்படியே இந்த யுத்தத்தில் வென்றுள்ளோம். அவர்கள் எமது தளபதிகளால் நெறிப்படுத்தப்பட்டனர். தமது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களால் நாட்டை முன்னேற்றுவதற்கான ஆற்றலையும் வலிமையையும் அறிவையும் இலங்கை கொண்டுள்ளது.

இந்நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எமது பிரச்சினைகளை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை.

ஜெனீவாவுக்கு எதிராக போராடுங்கள்

அனைத்து இலங்கையர்களும் அவர்கள் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெனீவாவில் உருவாகியுள்ள சூழ்நிலைக்கு எதிராக எழ வேண்டும். நாட்டை பாதுகாப்பதற்கு மக்களுடன் கிளர்ந்தெழ வேண்டியது எதிர்கட்சிகளின் கடமையாகும். எதிர்கட்சிகளும் அனைத்து இலங்கையர்களும் அவர்களின் இனம், சாதி, மதம், அரசியல் என்பவற்றை மறந்துவிட்டு
இத்தருணத்தில் இணைந்து ஒரே மக்களாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: