முதல்வர் , ஜெ., கூடங் குளத்திற்கு அனுமதிஅளித்தார்!


சென்னை:கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமிழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இவ்விஷயம் விவாதிக்கப்பட்டது. பின், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ஐந்து பக்க அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே, 1988ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, 2001ம் ஆண்டு, இதற்கான பணிகள், இந்திய அணு மின் நிலையத்தால் துவக்கப்பட்டது.முதல் அணு மின் நிலையப் பணிகள், 99.5 சதவீதமும், இரண்டாவது அணு மின் நிலையப் பணிகள், 93 சதவீதமும் முடிவடைந்த நிலையில், அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சில ஐயப்பாடுகளை எழுப்பி, அதை மூட வலியுறுத்தி, இடிந்தகரையில் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்ததும், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணிகளைத் தொடர வேண்டாம் என்று தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.குழு அறிக்கை: அந்த அடிப்படையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு, பிரதமரை டில்லியில் சந்தித்த போது, பிரதமர் விரிவாக ஆராய ஏற்பாடுகள் செய்வதாகத் தெரிவித்தார். பின், மத்திய அரசால், 15 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் மூன்று பேருடனும், மாநில அரசின் பிரதிநிதிகளான நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., ஆகியோருடனும் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது.வல்லுனர் குழு அளித்த அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலைகள் சர்வதேச தரத்திலான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. இக்குழுவும் பல்வேறு ஆய்வுகளை கூடங்குளத்தில் நடத்திய பின் தனது அறிக்கையை, பிப்ரவரி 28ம் தேதி அளித்தது.இந்தப் பின்னணியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை, மாநில அரசின் வல்லுனர் குழு அறிக்கை மற்றும் அணு மின் திட்டத்துக்கு எதிரானவர்களின் மனு விரிவாக ஆராயப்பட்டு, நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படக் கூடிய வாய்ப்பு இல்லை என்று தெரியவந்தது.எவ்வாறான நிலையிலும் அணு மின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதும், அணு மின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் தெரியவந்தது. இதனடிப்படையில், மீனவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாது என்ற அடிப்படையிலும், அப்பகுதி மக்களிடையே நிலவும் ஐயப்பாடுகளுக்கு வல்லுனர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அமைச்சரவை முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிதி ஒதுக்கீடு: மேலும், கூடங்குளம் பகுதியில் சிறப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், அங்கு வசிக்கும் மீனவர்களது விசைப் படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க, குளிர் பதனீட்டு நிலையம் அமைத்தல், அப்பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துதல், சாலை வசதிகள்போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை திறக்க நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்படும். அணு மின் நிலையப் பணிகளை மீண்டும் உடனே மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவுக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மக்கள் வரவேற்பு: இந்த அறிவிப்பு வெளியானதும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் துறையினர், இருளில் தவித்த மக்கள் பலரும், அரசின் தெளிவான முடிவுக்கு மனம் திறந்து பாராட்டு தெரிவித்தனர்; மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், கூடங்குளம் எதிர்ப்பாளர் உதயகுமார், இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், இப்பகுதியில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில், 7,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: