முதலமைச்சரைக் கொன்றவரின் தூக்கு தண்டனையை எதிர்ப்பதா?: பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Supreme Court டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளியான பல்வந்த் சிங் தூக்கு தண்டனையை எதிர்த்து முழு அடைப்பு நடத்திய பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் பியாந்த்சிங், கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இதற்கு சதித்திட்டம் தீட்டிய பல்வந்த்சிங் ராஜோனாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ரஜோனாவுக்கு நாளை பாட்டியாலா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் மத்திய அரசு தூக்குக்குத் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த மற்றொரு மரண தண்டனை கைதி புல்லார் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் இந்த கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:

மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜோனாவுக்கு கருணை காட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. அந்த நபர், பட்டப்பகலில் ஒரு முதல்வரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்.

தீவிரவாத குற்றங்களில் குற்றவாளி என நிரூபணம் ஆனவர்களுக்கு அரசியல் ஆதரவு அளிக்கப்படும் நிகழ்வுகள் பெருகி வருகின்றன. இத்தகைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வரும் தலைவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த 4 நாட்களாக பஞ்சாபில் நடந்து வரும் சம்பவங்கள், கவலை அளிப்பதாக உள்ளன. உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தால், கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் வீணாவதை தடுத்து இருக்கலாம். எல்லாம் நாடகம் என்றனர் நீதிபதிகள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: