தஞ்சாவூர்,பிப்.8-
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் பிரன்சிங்க ரோபி (33). இவர் கடந்த சில நாட்களுக்கும் முன் இந்தியாவிற்கு சுற்றுலாவிற்காக வந்தார்.
பின்னர் கடந்த 6-ந்தேதி திருநாகேஸ்வரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரசித்தப் பெற்ற கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.
இந்நிலையில் நேற்று தஞ்சாவூருக்கு வந்த தந்த பிரன்சிங்கரோபி, பெரியகோவிலுக்கு சாமி கும்பிட வாடகை காரில் வந்தார். காரை கோவில் அருகிலுள்ள கார் பார்க்கில் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கோவிலுக்குள் சென்றார். அவர் வைத்திருந்த சுற்றுலா பேக்கையும் காரில் வைத்து விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்து இருந்த அவரது பேக்கை காணவில்லை. பேக்கில் இருந்த பிரன்சிங்கரோபின் பாஸ்போட், யூரோ டாலர் 400 (இந்திய மதிப்பு ரூ.28,ஆயிரம்), இந்திய பணம் ரூ.42,ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் அனைத்தும் திருட்டுப்போயிரிந்தது.
இது குறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் பிரன்சிங்கரோபி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பிரன்சிங்க ரோபி போலீசாரிடம் கூறும் போது, எனது பணம் திருட்டுப் போனாலும் பரவாயில்லை. எனது பாஸ்போட்டை மட்டுமாவது கண்டுப்பிடித்து தாருங்கள். பாஸ்போட் இருந்தால் தான் எனது நாட்டிற்கு செல்ல முடியும்.
இந்த நாட்டில் எனது பொருட்கள் திருட்டுப் போனது மன வேதனையை தருகிறது என்றார்.