சென்னை: விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. இன்று மாலை முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. இதில் ஒரு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.
இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான சர்ச்சை உச்சபட்ச பிரச்சினையாக மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க கமலுக்கு சம்மதமென்றால் படத்தை வெளியிட அரசு உதவும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனர். கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனும், இயக்குநர் அமீரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுகள் நடத்திவிட்டனர்.
இன்று மாலை நட்சத்திர ஓட்டலில் முத்தரப்பு பேச்சு நடக்கிறது.
இதில் 24 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், கமலின் அண்ணன் சந்திரஹாஸன், அமீர் மற்றும் தமிழக அரசின் சார்பில் உள்துறைச் செயலர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தை தமிழக அரசே ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபத்திலிருந்து 30 நிமிடக் காடசிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் கோருவது குறிப்பிடத்தக்கது.
உள்துறைச் செயலர் சந்திப்பு இதனிடையே கமலின் அண்ணன் சந்திரஹாஸனை இன்று தமிழக உள்துறைச் செயலர் சந்தித்துப் பேசினார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார் சந்திரஹாஸன்.