அயோத்தியில் தோற்ற பாஜக !



அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்னையை வைத்து பாஜக அரசியல் செய்த காலத்திலிருந்தே அயோத்தி பாஜகவின் கோட்டையாக இருந்தது. 1991ல் இருந்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிஜேபியின் லல்லு சிங் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் இளம் மாணவ தலைவரான தேஜ் நாராயண்
பாண்டேயிடம் 5,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இவ்வெற்றி குறித்து கருத்து கூறிய பாண்டே தற்பொழுது சாதாரண பாமரன் பொய்யான கோவில் அரசியலை நம்புவதில்லை என்றும் வளர்ச்சியையும் நல்ல அரசையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

இந்திரா காந்தி காலத்திலிருந்தே காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளிலும் காங்கிரஸ் இம்முறை மண்ணை கவ்வியுள்ளது. அமேதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 5 சட்டசபை தொகுதிகளில் 2ல் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது.

சோனியா காந்தியின் ராய் பரேலி தொகுதியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பதோடு மூன்று தொகுதிகளில் மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளது. நான்கில் சமாஜ்வாதி கட்சியும் ஒன்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பீஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர்களோடு பிரியங்கா 17 நாட்கள் இத்தொகுதியில் மட்டுமே பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: