திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தீச்சட்டிப்பட்டு அருகே ஒரு வாலிபர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்தார். அவர் தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுகுறித்து ஜெகன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிகூறுகையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைதானது முதல் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் திட்டிக் கொண்டிருந்தார் ஜெகன். நேற்றும் கூட முதல்வரைத் திட்டியபடி இருந்தார். இரவில் திடீரென தீவைத்துக் கொண்டார் என்றார்.
ஜெகன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.