மும்பை: சுங்க வரி செலுத்தாமல் சில பொருட்களை லண்டனில் இருந்து எடுத்து வந்ததற்காக பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் வழியில் சென்றார்.
அப்போது சுங்கத் துறை அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனையிட்டனர். சோதனையில் அவர் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் கமுக்கமாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியங்கள், ஆடைகள் மற்றும் காலணிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனியாக அழைத்துச் சென்று சுமார் 40 நிமிடம் விசாரனை நடத்தினர். அதன் பிறகு அவருக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக பிபாஷா பாசு, மினிஷா லம்பா, மல்லிகா ஷெராவத்தின் சகோதரர் விக்ரம் லம்பா, பாடகர் மிகா சிங் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் சுங்க வரி செலுத்தாமல் பொருட்கள் கொண்டு வந்து விமான நிலையித்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.