பிளஸ்-2 தேர்வில் பிறமொழி பாடப்பிரிவில் சாந்தோம் ரோசாரியோ மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி காவ்யா 1192 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-
பிரெஞ்ச் - 198
பொருளாதாரம் - 200
வணிகவியல் - 200
வணிக கணிதம் - 200
கணக்குப் பதிவியல் - 200
ஆங்கிலம் - 194
மாணவி காவ்யா அதிக மதிப்பெண் பெற்றது குறித்து கூறியதாவது:- இவ்வளவு மதிப்பெண் பெற்று சாதனை படைத்தது மிகுந்த சந்தோசமாக உள்ளது. நான் இந்த அளவிற்கு சாதிப்பதற்கு எங்களது பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், எனது பெற்றோர் மிகுந்த ஊக்கம் அளித்தனர்.
வேறு மொழி பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்ததால் மாநில முதல் மாணவி என்ற அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. இனி சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்ட் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் தந்தை சண்முகம் சென்னை கூட்டுறவு வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு ஒரே மகள் காவ்யா மகள் சாதனை படைத்ததை பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதே பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீநிதி சமஸ்கிருதம் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1189. இவருடைய தந்தை ஸ்ரீநாத் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். தாய் ராஜேஸ்வரி கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவரும் சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்ட் படிக்க போவதாக தெரிவித்தார்.
ஆதம்பாக்கம் எஸ்.பி.ஏ.வி. பள்ளி மாணவி அபிநயா 1191 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். அவரை தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்:-
சமஸ்கிருதம் - 198 ஆங்கிலம் - 193 கணக்கு பதிவியல் -200 வணிகவியல் - 200 பொரு£ளதாரம் - 200 வணிக கணிதம் -200 நங்கநல்லூரில் வசித்து வரும் அபிநயாவின் தந்தை அரிஹர சுப்பிரமணி, தாய்- சொர்ணம். மாணவி அபிநயா கூறும் போது, 10-ம் வகுப்பு வரை தமிழை பாடமொழியாக படித்தேன். 11-ம் வகுப்பில் சமஸ்கிருதத்தை பாடமொழியாக எடுத்தபோது மற்ற மாணவிகள் எச்சரித்தனர்.
ஆசிரியர்களும், பெற்றோரும் எனக்கு தைரியம் சொல்லி படிக்க வைத்தனர். வகுப்பு ஆசிரியர்களின் சிறந்த பயிற்சியால் என்னால் சாதிக்க முடிந்தது. சி.ஏ. படிக்க ஆசை என்றார்.
பிற மொழி பாடத்தை மொழிப்பாடமாக எடுத்து படித்து சென்னை ஏ.வி. மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி மாணவர் ராஜாராம் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதிக மதிப் பெண்கள் எடுத்து 3-வது இடத்தை பிடித்துள்ள இவரது தந்தை கோதண்டராமன் வங்கியில் மேலாளராக உள்ளார். தாய் சாந்தி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் என்ஜினியராக பணிபுரிகிறார்.
இச்சாதனை பற்றி மாணவர் ராஜாராம் கூறும் போது, இந்த நேரத்தில் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. மெட்ரிக் பள்ளி மாணவி சாய்நித்யா 1190 மார்க்பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்தார். பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
சமஸ்கிருதம்- 198
ஆங்கிலம் - 193
பொருளாதாரம் - 199
வணிகவியல் -200
கணக்கியல் - 200
வணிக கணிதம் - 200
மாணவி சாய்நித்யா கூறுகையில், கடினமாக உழைத்தேன். மாநில அளவில் சாதனை படைத்தது சந்தோசமாக இருக்கிறது. இருந்தாலும் வேறு மொழி பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்ததால் மாநில அங்கீகாரம் கிடைக்காது சற்று வருத்தம்தான்.
எனது தந்தை ராம்மோகன் சார்ட்டர்டு அக்கவுண்ட்டடட் ஆக இருக்கிறார். எனது சகோதரி சார்ட்டர்டு அக்கவுண்ட் படிக்கிறார். நானும் அதே படிப்பை படிக்க விரும்புகிறேன் என்றார்.
பள்ளி முதல்வர் வைதேகி கிருஷ்ணன் கூறும் போது, எங்கள் பள்ளி தொடர்ந்து 13-வது வருடமாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்துள்ளது. 3 முறை மாநில ரேங்க் கிடைத்துள்ளது என்றார்.