கோவை:கோவையில் வணிக வளகாத்தில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் கருகி பலியாயினர். பலர் காயமடைந்தனர். கோவை அவினாசி சாலையில் வணிக வளாக கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் தனியார் வங்கி உள்ளது.இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது திடீரென தீப்பிடித்தது. இதனால் பரபரப்பு ஏற்படவே வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் எடுத்தனர்.தீ மளமளவென பரவியதும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் பலர் உள்ளே சிக்கினர். தீயணை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.இந்நிலையில் மீட்புப்பணிகளுக்காக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன.
3 பெண்கள் உள்பட 4 பேர் பலி
இந்த தீ விபத்தில் 4பேர் உடல் கருகி இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்கள் கீர்த்தனா (23), மகாலெட்சுமி , மெக்னா என மூன்று பெண்களும், ஒரு ஆண் என நான்கு பேர் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த இரு பெண்கள் ,தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.