மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து-உற்பத்தி பாதிப்பு: மாற்று மின்சாரத்துக்கு நடவடிக்கை

 Fire Mettur Thermal Station 1 Dead  மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தீ விபத்து

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகள் மூலமாக மொத்தம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் 210-மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்நிலையத்தின் முதலாவது யூனிட்டில் அதிகாலையில் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீப் பிடித்து எரிந்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி பெல்ட் ஆப்பரேட்டர் நல்லதம்பி உயிரிழந்தார். சுமார் 400 மீட்டர் நீளத்துக்கு கன்வேயர் பெல்ட் எரிந்து நாசமானது. மொத்தம் ரூ40 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா அறிக்கை

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

10.5.2012 அதிகாலை 00.30 மணியளவில் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கையாளும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 9 தீயணைப்பு வண்டிகள் உடனடியாக தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் சுமார் 4 மணி நேரத்திற்குள் தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது.

முடங்கியது மேட்டூர் அனல்மின் நிலையம்

இதனால் அனல் மின் நிலையத்திற்கு ஏற்பட விருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக, இரண்டு சந்திப்பு கோபுரங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி கையாளும் பகுதி மற்றும் கன்வேயர் சிஸ்டம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால், மேட்டூர் அனல் மின்நிலையத்தின் நான்கு யூனிட்டுகளுக்கும் நிலக்கரி எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பங்கரில் உள்ள நிலக்கரி மூலம் இன்று மாலை வரை மட்டுமே மேட்டூர் அனல் மின் நிலையத்தை இயக்க இயலும். இந்தத் தீவிபத்தின் விளைவாக, மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் 840 மெகாவாட் மின் உற்பத்திக்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்து, மீண்டும் மின் உற்பத்தி பணிகளை துவக்க சுமார் ஒரு மாத காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்கால நடவடிக்கை

பொது மக்களுக்கு பாதிப்பினை இயன்ற அளவு குறைக்கும் வகையில், தற்போது இயங்காமல் உள்ள தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் ஒரு யூனிட்டையும், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இயங்காமல் உள்ள ஒரு யூனிட்டையும் இன்று முதல் இயக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், பிள்ளை பெருமாள்நல்லூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 330 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.

இவற்றின்மூலம், இழப்பு ஏற்பட்டுள்ள 840 மெகாவாட் மின்சாரத்தில் 750 மெகாவாட் மின்சாரம் கிடைத்துவிடும். தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ரூ2 லட்சம் உதவித் தொகை

தீ விபத்தில் உயிரிழந்த உதவியாளர் நல்லதம்பி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவியாளர் கோபால் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தீவிபத்தில் உயிரிழந்த நல்ல தம்பி குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும், காயமடைந்த கோபாலுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: