டெல்லி: குடும்ப சூழ்நிலை, வறுமை, காதல் தோல்வி, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் நாடுமுழுவதும் 1.35 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப சூழ்நிலை, நோயினால் 24.3 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் காதல் தோல்வியால் பெரும்பாலோனோர் தற்கொலையை தேர்ந்தெடுத்துள்ளனர். வறுமையினால் 1.7 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறுகிறது மத்திய அரசின் புள்ளிவிபரம். இந்தியாவிலேயே மேற்கு வங்கமாநிலம்தான் தற்கொலை மரணத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. காதல் தோல்வியால்தான் தமிழ்நாட்டில் அதிக தற்கொலை மரணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது மத்திய அரசின் புள்ளிவிபரம்.
தினசரி 390 பேர் தற்கொலை: இந்தியாவில் 2001 -2011 பத்தாண்டுகளில் நாட்டில் தற்கொலை விகிதம் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 1,08,506 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேசமயம் 2011ம் ஆண்டு 1,35,585 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தினசரி சராசரியாக 390 பேர் தற்கொலை செய்கின்றனர்; இதில் 10பேர் காதல் தோல்வியால் மரணத்தை தழுவுகின்றனர்.
.காதல் தோல்வி மரணங்கள்: இந்தியாவில் காதல் தோல்வியால் இறப்பவர்களில் 15 சதவீதம்பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 16.5 சதவீதம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 3.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 1,716பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோல் புதுச்சேரியில் 557பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கம் நம்பர் 1: தற்கொலை செய்வதில் இந்தியாவிலேயே மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது இங்கு 12.2 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் மேற்கு வங்கத்தில் 16,492 பேரும், தமிழ்நாட்டில் 15,963 பேரும் தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதேசமயம் ஆந்திராவில் 15,077 பேரும், கர்நாடகாவில் 12,622 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு 2ம்: இடம் தற்கொலை மரணங்கள் நிகழ்வதில் நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தில் உள்ளது இதில் 588 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். சென்னை வாசிகள் 61 பேர் காதல் தோல்வியால் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே தற்கொலை அதிகம் நடக்கும் 4வது மாநகரமாக கோவை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கோவையில் 849 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
திருப்பூரில் 611 பேர்: திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 611 பேரில் 340 பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 20 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 109 பேர். இதில் 13 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூருக்கு வந்து இங்கு கணவருடன் வாழ்க்கை ஒத்து போகாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேற்கு மாவட்டங்களில் தற்கொலைகள்: மேற்கு மாவட்டங்களில் ஆண், பெண் தற்கொலை விகிதாச்சாரத்தில் 64.8 சதவீதம் ஆண்கள் என போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 35.4 சதவீதம். காதல் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டும் தான். பெரும்பாலான இளைஞர் தற்கொலைகள் குடும்ப பிரச்னை, வேலை இல்லாதது போன்றவை தான் காரணங்களாக உள்ளது.
709 தற்கொலை வழக்குகள்: கடலூர் மாவட்டத்தில் 2012ம் ஆண்டில் நவம்பர் வரை மொத்தம் 709 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் காதல் விவகாரத்தில் நடந்த தற்கொலையாக 10 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இளம்பெண்கள் மட்டும் 11 பேர். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 7 பேர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் 343 பேர் தற்கொலை, மர்ம சாவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதில், 12 பேர் கலப்பு திருமணங்களால் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைவு: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2010ம்ஆண்டிலும், 2011ம்ஆண்டிலும் தலா 30க்கும்மேற்பட்ட காதல்தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 2012ம்ஆண்டில் மட்டும் 50க்கும்மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளநிலையில் அவற்றில் காதல் பிரச்சனைகாரணமாக கணக்கிட்டால் 10க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளது.
காதல் நிலையங்கள்: நெல்லை மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 14 பேரும், 2012ம் ஆண்டில் 15 பேரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை மட்டுமே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவை போலீசாரால் பதிவு செய்யப்பட்டவை. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது காவல் நிலையங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான குமரியில் காதல் தோல்வியால் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றே தெரியவருகிறது.
.
.