சென்னை: சரவணபவனின் துபாய் கிளையில் பணியாற்றி மர்மமான முறையில் உயிரிழந்த தெய்வமணியின் குடும்பம் மிரட்டப்படுவதாக டிஜிபியிடம் இன்று புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சரவணபவனின் துபாய் கிளையில் பணிபுரிந்தவர் தெய்வமணி. திருச்சி லால்குடியைச் சேர்ந்த இவர் கடந்த 1-ந் தேதி துபாய் ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெய்வமணியின் உறவினர்கள் சரவணபவன் நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் சரவணபவன் நிர்வாகம் முறையான பதிலைத் தராமல் அலட்சியப் படுத்தியதுடன் அவர்களை மிரட்டவும் செய்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. தெய்வமணியின் உறவினர் சக்திவேல் என்பவரை மிரட்டியதாக சரவணபவன் ஊழியர் மார்ஷல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவகுமாரையும் விசாரிக்க தேடிவந்தனர். இந்நிலையில் சிவகுமாரே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் இந்த விசாரணை பாரபட்சமாக நடப்பதாக தெய்வமணியின் உறவினர்கள் புகார் கூறியிருந்தனர்.இந்நிலையில் தெய்வமணியின் மரணம் தொடர்பாகவும் சரவணபவன் நிர்வாகத்தின் மிரட்டல் குறித்தும் காவல்துறை தலைவரிடம் புகார் மனு இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சரவணபவன் நிர்வாகம் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெய்வமணியின் தாயார் இந்திராணி தெரிவித்துள்ளார்.