சென்னையில் ஓடும் பஸ்சில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கு: 4 பேர் கைது-191 சவரன் மீட்பு

சென்னை: சென்னையில் கடந்த 29.8.2012 அன்று ஓடும் பஸ்சில் 5 கிலோ நகைகளை கொள்ளை போன வழக்கில் தொடர்புடைய 4 பேரை, போலீசார் மும்பையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 191 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பஸ்சில் பயணித்த நகைக்கடை ஊழியர் மனோஜ், கே.பி.சிங் ஆகியோரிடம் இருந்து கடந்த 29.8.2012 அன்று 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இது குறித்த புகாரின் பேரில், பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வந்தனர்.
கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் தனராஜ், இன்ஸ்பெக்டர்கள் சகாதேவன், ஜோக்கிம்ஜெரி ஆகியோர் தலைமையில் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
நகையை பறிக்கொடுத்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் நகைகளை மும்பையில் இருந்து வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகளிடம் நகை இருப்பதை அறிந்த கும்பல், மும்பையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
மும்பையில் இருந்து வந்த இரு வியாபாரிகளும், கோவை, ஈரோடு ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டு மதுரைக்கு சென்றனர். மதுரையில் வியாபாரத்தை முடித்து கொண்டு சென்னைக்கு வந்த போது ஆம்னி பஸ்சில் நகைகளை பறி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விலாஸ் பீமாராவ்(30), ராமாராவ்(30), சந்து குண்டேபாசுக்குலே(28), சீத்தாராம் டிக்காலே(36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 191 சவரன் கொள்ளை நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள நகைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: