வங்கதேசத்துக்கு 88 குளிர்சாதன வசதிகொண்ட பஸ்களை சப்ளை செய்வதற்காக ரூ.36 கோடி மதிப்புடைய ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.வங்கதேச போக்குவரத்து கழகத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அதிக அளவில் பஸ்களை சப்ளை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேச போக்குவரத்து கழகத்துடன் நெருங்கிய தொடர்பை லேலண்ட் கொண்டுள்ளது.
இதுவரை வங்கதேச போக்குவரத்து கழகத்துக்கு 11,000 பஸ்களை லேலண்ட் சப்ளை செய்துள்ளது. சமீபத்தில் 50 தொடர் பேருந்துகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை வங்கதேச போக்குவரத்துக் கழகத்திடமிருந்து லேலண்ட் பெற்றது. இந்த நிலையில், மீண்டும் ஒரு பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.
88 குளிர்சாதன வசதிகொண்ட பஸ்களை சப்ளை செய்வதற்காக வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து புதிய ஆர்டர் லேலண்ட்டுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து லேலண்ட் மேலாண் இயக்குனர் வினோத் தாசரி கூறுகையில்," வங்கதேச போக்குவரத்து துறையில் முக்கிய இடத்தை வகித்து வருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ரூ.36.41 கோடி மதிப்பிலான இந்த புதிய ஆர்டர் மூலம் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வங்கதேச டீலர் இப்தாஸ் ஆட்டோஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.