மானேசர்: குர்காவ்ன் அருகே உள்ள கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமியைக் காப்பாற்ற மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மாஹி நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். கிணற்றில் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமிக்கு கயிறைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்துள்ளனர். அதைப் பார்க்காமல் சிறுமி விழுந்துவிட்டாள்.
சிறுமி மாஹி நேற்று தான் தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள் என்பது குறிப்பிடத்தக்கது.