தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு-உற்சாகத்துடன் பள்ளி சென்ற மாணவ, மாணவர்கள்

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பினர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 55 ஆயிரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றோடு கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கின.

இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவியருக்கு இன்று முதல் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன. புத்தக சுமையை குறைக்க, இந்த ஆண்டில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரும் 4ம் தேதியும், சிபிஎஸ்சி பள்ளிகள் வரும் 13ம் தேதியும் திறக்கப்படுகின்றன.

இது குறித்து பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர் வருகை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கடுமையாக உழைத்து, 
மாணவர்களின் தனித் திறனை கண்டறிந்து அதை மேம்படுத்த வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் வாரத்தில் 10 பாட வேளையாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தினமும் 2 முறை வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகளை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் தினமும் கூட்டு பிரார்த்தனை கட்டாயம் நடத்தி, முக்கிய செய்திகளை மாணவர்களுக்கு தெரிவிப்பது, தனித்திறன் படைத்த மாணவர்களை மேடையில் நிறுத்தி பாராட்டு தெரிவிப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் காணும் மாணவ, மாணவிகள் பட்டியலை தயாரித்து, பிரார்த்தனை கூட்டத்தில் அவர்களுக்கு கூட்டாக வாழ்த்து கூறுவது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: