டார்ஜிலிங்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாக்கியது போல மேற்கு வங்கத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தை பிரித்து கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க கோரி போராட்டம் வலுத்து வருகிறது.
இந்த போராட்டத்தை கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா முன்னெடுத்து வருகிறது. டார்ஜிலிங் நகரில் ஊர்க்காவலர் ஒருவரை மர்ம நபர்கள் நேற்று தீயிட்டுக் கொளுத்தினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் தங்கிய டாக்தா மாளிகையை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர். மாங்போ என்ற இடத்தில் ஒரு லாரியும், சொகுசு வாகனம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதேபோன்று இரண்டு இடங்களில் போலீசார் இல்லாத நிலையில் போலீஸ் பூத்துகள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. இந்த சம்பவங்களை தொடர்ந்து பல பள்ளிக்கூடங்களில் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ வைப்பு சம்பவங்களை கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா நடத்தவில்லை என்றும் எதிர்க்கட்சியினர்தான் இந்த வேலைகளில் ஈடுபட்டனர் என்றும் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கிரி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மத்திய ஆயுதப்படை போலீசார் டார்ஜிலிங்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.