பேய் பிடித்ததாக கூறி மனைவியை நிர்வாணமாக அடைத்து வைத்த கணவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேய் பிடித்ததாக இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கி நாயனபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் நதியா (24). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்தானத்துக்கும் (31) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில், நதியாவிடம் வரதட்சணை கேட்டு சந்தானம், அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கவுரி (50), தங்கை சுமதி (25), ராஜேந்திரனின் அண்ணன் பூமிநாதன் (60) உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் நதியா பெற்றோருக்கும், சந்தானம் பெற்றோருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சந்தானம் குடும்பத்தினர், நதியாவுக்கு பேய் பிடித்ததாக கூறி அவரை நிர்வாணப்படுத்தி ஒரு அறையில் அடைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறிதுநேரம் நதியாவை வெளியே விட்டு விட்டு பின்னர் மீண்டும் அறையில் வைத்து பூட்டி விடுவார்களாம். 

கடந்த 2ம் தேதி இரவு அறையில் தூங்கிக் கொண்டிருந்த நதியாவின் முகத்தில் சந்தானம் தலையணையை வைத்து அழுத்தி கொல்ல முயன்றுள்ளார். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய நதியா நேற்று திருப்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தானம், ராஜேந்திரன், கவுரி ஆகியோரை கைது செய்து திருப்பத்தூர் 2ம் வகுப்பு மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் முன் ஆஜர்படுத்தினர். 

இதனையடுத்து சந்தானம், ராஜேந்திரனை திருப்பத்தூர் கிளைச் சிறையிலும், கவுரியை வேலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பூமிநாதன், சந்தானத்தின் தங்கை சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: