பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ் கவிழ்ந்துபலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர்.
இதில் பஸ்சில் பயணம் செய்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 47 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் பயணம் செய்து படுகாயமடைந்த அதிரை சுரக்காய்கொல்லை தெருவை சேர்ந்த சேக் அலி (49), அதிரை புதுத்தெரு அலி மொய்தீன், பட்டுக்கோட்டை ஆட்டோ டிரைவர் பாலாஜி (23), பஸ்சில் பயணம் செய்த புதுவயல் சுசிலா (52), புதுப்பட்டினம் சுசிலா (40) ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் பாலாஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் மற்றும் பட்டுக்கோட்டை நகர மன்றத்தலைவர் ஜவஹர் பாபு ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தனர். மேலும் மருத்துவரிடம் தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டனர்.
பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்றும் சரியான சிகிச்சை மற்றும் முதலுதவி செய்யவில்லை என்றும் கூறி அதிரை கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான பேர் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் முத்துக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சண்முகவேல், தென்னை நல வாரிய உறுப்பினர் மலைஅய்யன், முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலை நேரத்தில் போதிய டாக்டர்கள் இருக்க வேண்டும். ஸ்கேன் வசதி, போதிய உபகரணங்கள் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது நிறுத்த வேண்டும் என்று மறியல் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் அதை சரி செய்வதாக கூறியதன் பேரில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது












