தலித் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியை கைது செய்க: திருமாவளவன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தலித் மாணவ, மாணவியர்களை கழிப்பறை சுத்தம் செய்ய சொன்ன தலைமை ஆசிரியரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாணிக்கவல்லி என்பவர் உள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியின் கழிவறைகளை சுத்தப்படுவத்துவதற்கு தலித் மாணவ, மாணவிகளை அவர் நிர்பந்தித்துள்ளார். இதன்பேரில் அப்பள்ளிக் கழிவறைகளை தலித் மாணவ, மாணவியர்கள் பல ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த தலைமை ஆசிரியர் கழிவறைக்குச் செல்லும் போது, தலித் மாணவ, மாணவியரை தண்ணீர் வாளியை உடன் தூக்கிச்சென்று சுத்தம் செய்ய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நால்வழி புறச்சாலைகளை கடந்து மாணவர்களை தேநீர் வாங்கி வரவும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதாரமாக உள்ள புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறையின் மாவட்ட அலுவலர்களிடம் விசிகவினர் அளித்தனர். எனினும், அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசிக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியளியை தந்துள்ளது. குறிப்பிட்ட அந்த தலைமையாசிரியரை காப்பாற்றும் நோக்கத்துடனேயே கல்வித்துறையும் செயல்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. ஆகவே, உடனடியாக அந்த தலைமையாசிரியரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழக அரசு கைது செய்ய வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: